நிமோனியா (Pneumonia)


நிமோனியா (Pneumonia)

நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. மிக அதிகமான குழந்தைகள் இறப்பதற்கும், நோய்த் தாக்கத்தால் மோசமான பின்விளைவுகளுக்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது நிமோனியா காய்ச்சல்தான்.
அறிகுறிகள்
* காய்ச்சல்
* இருமல்
* அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிக்கை)
* மூச்சுவிட கஷ்டமாக இருத்தல்.
காரணங்கள்
* குறைந்த எடை
* ஊட்டச்சத்துக் குறைபாடு
* வைட்டமின் & ஏ குறைபாடு
* தாய்ப்பால் இல்லாமை
* சிகரெட் புகை
போன்றவை மிக முக்கியக் காரணங்கள். இவை தவிர, அதிகம் பேர் உள்ள குடும்பம், வீட்டில் இருப்பவர்களுக்கு நுரையீரல் நோய் இருத்தல், அதிக மக்கள் வசிக்கும் இடத்தில் வசிப்பது, மாசுபாடான காற்றை வீட்டிலும், வெளியிலும் சுவாசித்தல் போன்றவையும் நிமோனியா நோய் வரக் காரணங்களாக இருக்கின்றன.
பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாதமே ஆன குழந்தைகளுக்கு நிமோனியா வருவதற்கு, குரூப்&பி ஸ்ரெப்டோ காக்கை, ஈகோலி, கிளப்ஸியெல்லா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை முக்கியக் காரணம்.
3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையுள்ள குழந்தைகளுக்கு, நீமோகாக்கை, ஹெச்&இன்ஃபுளூயன்சா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை நிமோனியா காய்ச்சலை ஏற்டுத்துகின்றன.
ரெஸ்பரேட்டரி சின்சைட்டியல் வைரஸ், இன்ஃபுளூயன்சா வைரஸ், பாரா இன்ஃபுளூயன்சா வைரஸ், அடீனோ வைரஸ் போன்றவையும் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிக் காரணமாக இருக்கின்றன.
ஐந்த வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் கிருமிகள்தான் அதிக அளவில் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.
வைரஸ்களால் ஏற்படும் அறிகுறிகள்
* மூக்கில் நீர் வடிதல்
* இருமல்
* காய்ச்சல்
* அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிகை)
* மூச்சு விடுவதற்குக் கஷ்டம்
* உடல் நீல நிறமாக மாறுதல்
* மூச்சுவிட முடியாமல் சோர்வு
பாக்டீரியக்களால் ஏற்படும் அறிகுறிகள்
* நடுக்கத்துடன் குளிர்
* அதிகமான காய்ச்சல்
* இருமல்
* நெஞ்சு வலி
* அதிகமாக மூச்சு வாங்கதல் (மூச்சு விடும் எண்ணிகை)
* கவலை& சோர்வு
* நினைவிழப்பு
மேற்கண்ட அறிகுறிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால், நெஞ்சில் சீழ் பிடிக்கும்.

பரிசோதனை
மார்பக எக்ஸ்&ரே எடுத்துக் கொண்டு டாக்டரை உடனே சென்று பார்க்க வேண்டும்.
சிகிச்சை
நிமோனியாவை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. நிமோனியா இல்லாத நிலை ஆனால், இருமல் மற்றும் சளித்தொல்லை.
2. நிமோனியா காய்ச்சல்.
3. தீவிரமான நிமோனியா காய்ச்சல் அல்லது மிக அதிகமான நோய்
முதல் வகை நிமோனியாவுக்கு, தொண்டை வலி மற்றும் இருமலைப் போக்கம் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். சாதாரண இருமலாக இருந்தால் ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும். முப்பது நாள்களுக்கு மேல் இருமல் இருந்தால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் மூச்சிவிட நேர்ந்தாலோ, நெஞ்சு உள் இழுத்தாலோ உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.
ஐந்து நாள்களுக்குப் பிறகு, குழந்தையை மீண்டும் பரிசோதித்துப் பார்த்து, நோய் குணமாகவில்லை என்றால், மேல் சிகிச்சை அளிக்க வேண்டும்.
இரண்டாம் நிலை நிமோனியாவுக்கு, வீட்டில் இருக்கும் இருமல் மருந்தைக் கொடுத்து, தொண்டை வலியைக் குறைக்க வேண்டும்.
மூச்சு விட கஷ்டப்பட்டாலோ, நினைவிழந்தாலோ உடனே மருத்துவரிடம் கொண்டு வர வேண்டும். இரண்டு நாள்களுக்குப் பிறகு குழந்தையைப் பரிசோதிக்க வேண்டும்.
மூன்றாம் நிலை நிமோனியாவுக்கு, டாக்டரிடம் காட்டி சில முதலுதவி மருந்துகளைக் கொடுத்துவிட்டு, மருந்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
தடுக்கும் முறைகள்
* குழந்தைத் தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் மற்ற உணவு வகைகளையும் கொடுக்க வேண்டும்.
* புட்டிப்பால், டின் பவுடர் பால் கொடுக்கக்கூடாது.
* குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது.
* சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.
* குழந்தை பிறந்தவுடன் தக்க தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும்.
*அவ்வப்போது குழந்தை வயதுக்கேற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து சரிவிகித உணவு கொடுக்க வேண்டும்.
* சளி, மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரிடம் காட்டி, நோய் தீவிரமாகாமல் தடுக்க வேண்டும்.

Leave a comment